புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் 25 ஆயிரம் ஊர்க்காவல் படையினரை நீக்கும் மாநில அரசின் முடிவுக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஊர்க்காவல் படையினருக்கும், மாநில காவலர்களுக்கு இணையாக அலவன்ஸ் வழங்க ேவண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 25 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு கடந்த செவ்வாயன்று அறிவித்திருந்தது. அரசின் இந்த முடிவை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பிரியங்கா காந்தி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பண்டிகையன்று பெற்றோர்கள், இனிப்பு, புது துணி மற்றும் பரிசு பொருட்களை குழந்கைளுக்கு வாங்கி தருவார்கள். ஆனால், 25 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் தங்கள் கஷ்டங்களுடன் போராடுகின்றனர். உத்தரப் பிரதேச அரசு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும். அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படமாட்டார்கள் என எழுத்து மூலமாக உத்தரவாதம் தரவேண்டும்,’ என்று கூறியுள்ளார். மேலும், அரசின் முடிவை எதிர்த்து பெண் ஊர்க்காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ காட்சியையும் அவர் பதிவிட்டுள்ளார்.