×

ஓட்டி பார்க்க வேண்டும் எனக்கூறி புதிய பைக்குடன் வாலிபர் எஸ்கேப்: வடிவேலு நகைச்சுவை பாணியில் கைவரிசை

ஆலந்தூர்: மடிப்பாக்கம் பஜார் ரோட்டை  சேர்ந்த ஜான் (25). இவரது சகோதரர் எட்வர்டு (23) ஆகியோர், அதே பகுதியில் பைக் ஷோரூம் நடத்தி  வருகின்றனர். நேற்று ஆட்டோவில் இங்கு வந்த ஒரு வாலிபர், புதிய பைக் ஒன்றை தேர்வு செய்து, வாங்கப்போவதாக கூறினார். பின்னர், அந்த பைக்கை ஓட்டி பார்க்க வேண்டும், என்று கூறினார். ஆனால், ஷோரூம் உரிமையாளர்கள் தயங்கினர். அப்போது அந்த வாலிபர், தான் வந்த ஆட்டோவின் டிரைவரிடம், ‘‘நான் வரும்வரை இங்கேயே காத்திருங்கள்,’’ என்று கூறிவிட்டு புதிய பைக்குடன் சென்றார்.  ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து, ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோது, ‘‘அந்த நபர் எனக்கு யார் என தெரியாது.  சவாரிக்கு அழைத்தார், வந்தேன்.   எனக்கும் பணம் தரவில்லை’’  என்றார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஷோரூம் உரிமையாளர்கள், இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில்  போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.வடிவேலு நகைச்சுவை காட்சியில் வருவதுபோல் நடந்த இந்த நூதன பைக் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* புதுவண்ணாரப்பேட்டை இளைய முதலி தெருவை சேர்ந்த அமீது மனைவி போமல் (32) என்பவர், குடும்ப தகராறில் கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், புகாரின் பேரில் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
* முகப்பேர் 1வது பிளாக் பகுதியை சேர்ந்த பாரதி (32), நேற்று முன்தினம் இரவு அதே பகுதி 4வது பிளாக்கில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், பாரதியை தாக்கி, அவர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
* அம்பத்தூர் சந்திரசேகரபுரம் முதல் தெருவை சேர்ந்த ராஜாராம் (47) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 1 லட்சம், 5 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
* கொரட்டூர் சீனிவாசபுரம் முதல் மெயின் ரோட்டை சேர்ந்த கீதா (62), நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
* சென்னை திருவிக நகரில் உள்ள சாந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு. மத்திய அரசில் மருந்து ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரசாந்தி (30). தம்பதிக்கு சகஸ்ரா (3) என்ற குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்றவுடன், கீழ்தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளரிடம் குழந்தையை பார்த்து கொள்ளுமாறு விட்டுவிட்டு, முதல் தளத்தில் உள்ள தனது வீட்டில் பிரசாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
* சென்னை அசோக் நகரில் கோயில் உண்டியலை உடைத்து ₹12 ஆயிரத்தை கொள்ளையடித்த தண்டையார்பேட்டையை சேர்ந்த பழைய குற்றவாளி விஜய் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில், தொடர்புடைய அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.
* அம்பத்தூர், லெனின் நகர் 21வது குறுக்கு தெருவை சேர்ந்த செண்பகவள்ளி (65) நேற்று அதே பகுதியில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 9 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
* கொடுங்கையூர் 2வது பிளாக் 4வது தெருவை சேர்ந்தவர் மதியழகன் (47), பெயின்டர்.  இவரது மனைவி மலர். மகன் ஜீவானந்தம். மகள் சாது மித்ரா. நேற்று முன்தினம் இரவு மதியழகன் வீட்டின் அருகே, கண்ணதாசன் நகர் 6வது பிரதான சாலையில் சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

Tags : The new bike, the young men Escape
× RELATED பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்