சென்னை: சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டர்கள் தொடர்பான புகார் குறித்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தக்கோரி அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்குகள் நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மை செயலாளர் அனுமதி அளித்துள்ளதாக அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண் தெரிவித்திருந்தார். நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சங்கர் ஆஜராகி, 349 உள்ளாட்சி டெண்டர்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளதாகவும், 41 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 117 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என நீதிபதிகளிடம் கோரினார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவு பிறப்பித்து ஓராண்டு காலம் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்து, விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் என்றும், விசாரணையை கண்காணித்து 2 வாரங்களுக்குள் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.