×

தீவிரவாதத்தை வளர்ப்பதால் கருப்பு பட்டியலில் தொடர்கிறது பாக்.

பாரிஸ்: நிதி மோசடி மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுக்கத் தவறியதால், பாகிஸ்தானை தொடர்ந்து கருப்பு பட்டியலில் வைக்க சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு (எப்ஏடிஎப்) முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எப்ஏடிஎப்) கண்காணித்து வருகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் ஈரான், வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை எல்லாம் இந்த அமைப்பு கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் நிதி மோசடியில் ஈடுபடுவது, நிதி திரட்டுவதை தடுக்க, 27 நடவடிக்கைகள் கொண்ட செயல் திட்டம் ஒன்றை எப்ஏடிஎப் கடந்தாண்டு பாகிஸ்தானுக்கு வகுத்து கொடுத்தது.

இவற்றை இந்தாண்டு அக்டோபருக்குள் நிறைவேற்ற கெடுவும் விதித்திருந்தது. ஆனால், அவற்றில் 5 நடவடிக்கைகளை மட்டுமே பாகிஸ்தான் நிறைவேற்றியது. இது குறித்து பாரிசில் கடந்த 5 நாட்களாக நடந்த எப்ஏடிஎப் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில், செயல் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாத பாகிஸ்தானை தொடர்ந்து கருப்பு பட்டியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டது. செயல் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.


Tags : Pak , Terrorism, Black List, Pakistan
× RELATED பாக்.கில் சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளி கொலை