டெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டெல்லியில் நடைபெற்று வந்த நிலையில் முதல் முறையாக தமிழகத்தில் ஒழுங்காற்றுக்குழு கூடுகிறது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19வது கூட்டம் அக்.31ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது இதுவே முதல்முறை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 18 கூட்டங்களும் பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றன.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 18வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று நடந்தது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியின் பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் 9ம் தேதி வரை பெய்த மழையின் அளவு, அதன் மூலம் அணைக்கு வந்த நீர், அந்த காலக்கட்டத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதி அணைகளில் இருந்த நீர் இருப்பு, தமிழகம், புதுச்சேரி, கேரளாவிற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நீரின் அளவு குறித்த கர்நாடகா கொடுத்த அறிக்கையுடன் கேரளா, புதுச்சேரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.