சோனிட்பூர்: அசாம் மாநிலத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி எராளமான பயணிகள் மாயமாகி உள்ளனர். அசாம் மாநிலத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில் பயணிகள் நீரில் தத்தளிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்தில் பிஹியா கவுன் எனும் இடத்தில் இருந்து தேஸ்பூரில் உள்ள பஞ்ச்மைல் பகுதிக்கு சுமார் 70 முதல் 80 பயணிகள் மற்றும் சில இரு சக்கர வாகனங்களை ஏற்றி கொண்டு நாட்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஜியாபராலி ஆற்றில் படகு சென்றிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி சென்றதால் பாரம் தாங்காமல் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரைக்கு சற்று தூரத்தில் படகு கவிழ்ந்ததால் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரையேறினர். அதே சமயம் நீச்சல் தெரியாத சிலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதில் சிக்கி எராளமான பயணிகள் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போன நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாயமான பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேஸ்பூர் பஞ்ச்மைல் பகுதியில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தைக்கு பயணிகள் படகில் பயணித்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் 61 பேருடன் சென்றுகொண்டிருந்த சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் கடந்த மாதம் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.