திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுங்க இலாகாவினர் நடத்திய அதிரடி சோதனையில் 50 கோடிக்கு மேல் கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டு நகைகள் செய்து அதை வெளிமாநிலங்களில் விற்பதாக கொச்சி சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை திருச்சூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் 123 கிலோ கடத்தல் தங்கம், 2 கோடி ரொக்கம், 1900 அமெரிக்க டாலர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 17 பேரை பிடித்து, சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடத்தல் தங்கம் மூலம் கோடி கணக்கில் வரி ஏய்ப்பு செய்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு 50 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.