×

கோடியக்கரையில் சீசன் துவங்கியது வெளிமாவட்ட மீனவர்கள் குவிந்தனர்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த மாதத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கோடியக்கரையில் வந்து தங்கி மீன்பிடிப்பது வழக்கம். இந்த சீசன் காலத்தில் காலா, ஷீலா, வாவல், நீலக்கால் நண்டு, இறால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகையான மீன்கள் பிடிக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். தற்போது, கோடியக்கரையில் சீசன் துவங்கி உள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து பைபர் மற்றும் விசைப்படகுகள் 50க்கும் மேற்பட்டவை கோடியக்கரைக்கு வந்துள்ளன. நாள்தோறும் ஏராளமான மீனவர்கள் கோடியக்கரையிலிருந்து காலை மற்றும் மாலை வேலைகளில் மீன்பிடிக்க செல்கின்றனர்.

மீன்பிடித்து திரும்பும் மீனவர்களது வலையில் காலா, ஷீலா, வாவல், இறால், நண்டு, மட்லீஸ் போன்ற மீன்கள் கிடைக்கின்றன. இதேபோல் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கடற்கரை பகுதியிலும் மீன்பிடி தொழில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிருநாளில் வடகிழக்கு பருவ காற்று வீச துவங்கிய உடன் இந்த பகுதியில் மீன்பிடி சீசன் முடிவடைந்து அப்பகுதி மீனவர்களும் கோடியக்கரைக்கு வந்து விடுவார்கள். இந்த மீன்பிடி சீசன் குறித்து கோடியக்கரை முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் சித்ரவேலு கூறியதாவது: அக்டோபர் முதல் மார்ச் வரை கோடியக்கரையில் அதிகளவில் மீன்கள் கிடைக்கும். இதனால் மீனவர்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும். தற்போது சீசன் துவங்கி உள்ள நிலையில் மட்லீஸ், வாவல், காலா போன்ற மீன்கள் கிடைக்கின்றன. கடந்த 2 நாட்களாக அதிகளவில் நீலகால் நண்டு கிடைக்கிறது. இதனை கடற்கரையிலேயே அவித்து சிங்கப்பூர், அமெரிக்காவிற்கு அனுப்பும் பணி மும்முரமாக நடக்கிறது என்றார்.

Tags : fishermen ,season ,Kodiyakara ,start ,Outdoor Fishermen , Kodiyakkarai, Season, Fishermen
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...