டெல்லி : டெல்லியில் செயல்படுத்தப்படவுள்ள ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை வாகன விதி முறையில் இருந்து பள்ளி வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.காற்று மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு நவம்பர் 4 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வாகன கட்டுப்பாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.இதன்படி வாகன எண்ணின் கடைசி இலக்கம் ஒற்றைப்படையா மற்றும் இரட்டைப்படையா என்பதை பொருத்து வாகனங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க அனுமதிக்கப்படும்.
இந்த கட்டுப்பாடுகளில் இருந்து தனியாக வாகனம் ஓட்டிச் செல்லும் பெண்களுக்கும் விவிஐபி வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.அந்த வரிசையில் தற்போது பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பள்ளியில் மாணவர்களை விட்டுவிட்டு திரும்பும் வாகனங்களின் நிலை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.