×

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு...பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா  பயணிகள் வருவது வழக்கம். அதன்படி சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த 39 பேர் நேற்று ஒரு தனியார் பேருந்தில் புனித பயணம் மேற்கொண்டனர். அந்தப் பேருந்து, மதினாவில் இருந்து 170 கிமீ தூரத்தில் உள்ள அல் - அஹல் என்ற கிராமத்தின்  அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த 35 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும் மீட்பு படையினரும் காயமடைந்தவர்களை மீட்டு அல்ஹம்னா மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இந்த கொடூர விபத்து பற்றி அறிந்த மதினா மாகாண ஆளுநரும் இளவரசருமான பைசன் பின் சல்மான் பின் அப்துல்லாஜிஸ், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுமாறு  அறிவுறுத்தியுள்ளார். விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் மதினா அருகே பஸ் விபத்துக்குள்ளான செய்தி அறிந்ததும் கலங்கிபோனதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை  பிரார்த்தனை செய்வதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.


Tags : Bus crash ,Saudi Arabia ,pilgrimage , Bus crash in Saudi Arabia: 35 killed in pilgrimage
× RELATED வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச...