சென்னை: மின் வாரியத்தை கண்டித்து, போராட்டம் நடத்துவதாக தொமுச அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: கேங்மேன் பதவி தொடர்பான நேர்முகத் தேர்வு நடத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில், கம்பத்தில் ஏறுவது உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, மாதிரி உடல் தகுதி தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி கோவையில் கேங்மேன் பதவிக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்வதை உடனடியாக மின்வாரியம் நிறுத்த வேண்டும். தொழிலாளர் விரோத போக்கை கைவிட்டு விட்டு கேங்மேன் பதவி குறித்து நேர்முகத் தேர்வுகள் உட்பட எந்தவொரு நடவடிக்கையையும் மின்வாரியம் எடுக்க கூடாது என்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி வரும் 22ம் தேதி, கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தொமுச சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.