களக்காடு: சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள். தலைமையின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து களக்காடு ஒன்றியம் மீனவன்குளம் கிராமத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் பட்சத்தில் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவது குறித்து முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ்தான் முடிவு செய்வார்கள். அதிமுக தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன். ராஜிவ்காந்தி படுகொலை குறித்து சீமான் கூறிய கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. நாவை அடக்கி சீமான் பேச கற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.