திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அறைகள் முன்பதிவு செய்ய அட்வான்ஸ் செலுத்த வேண்டும் என்று கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி தெரிவித்தார். திருப்பதி-திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: 2020 ஜனவரி முதல் திருமலையில் தங்குவதற்காக அறைகள் முன்பதிவு செய்ய முன்பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தேவஸ்தானத்தில் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் பணமில்லா பரிவர்த்தனைக்கு அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஒதுக்கீடு செய்யக்கூடிய அறைகளுக்கு 97 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. எம்பிசி ஓய்வறைகளுக்கு 100 சதவீதமும், டி.பி. கவுன்டரில் 91 சதவீதமும், சப்தகிரி 62 சதவீதம், ரம்பகிஜா, சுராபுரம் தோட்டா, உட்பட பகுதிகளில் அறைகள் பெறுவதற்கு 50 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளித்து அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.