×

பேருந்து படிக்கட்டு அருகில் பயணம் செய்ததால் வெளியே வீசப்பட்ட பெண்: சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேருந்தின் படிக்கட்டு அருகில் பயணம் செய்த பெண் தூக்கி வீசப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது. குமாரபாளையம் அடுத்த அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோகிலா. இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்ல அரசுப் பேருந்தில் சென்றிருந்தார். அப்போது இருக்கை கிடைக்காததால் படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கோட்டைமேடு என்ற இடத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் மாற்றுப் பாதையில் செல்கிறது. அப்போது கோட்டைமேடு வழியாக வந்த பேருந்து சர்வீஸ் சாலையில் மாற்றுப் பாதையில் பேருந்து வேகமாக திரும்பியது. அப்போது நிலைதடுமாறிய கோகிலா பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தார்ச்சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு, சாலையோர சாக்கடையில் விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோகிலாவுக்கு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் நெடுஞ்சாலையில் செல்லும் வேகத்திலேயே சர்வீஸ் சாலை வளைவிலும் செல்வதால் விபத்து ஏற்படுவதாக மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபத்து குறித்த காட்சிகள் அருகில் உள்ள கார் விற்பனை மைய சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்தக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : The bus stairs, the blown woman
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...