ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஈடிஎஸ்., கொசுக்கள் இல்லை என்ற போதிலும், சமவெளிப் பகுதிகளுக்கு சென்று வரும் சிலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அச்சுறுத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆலோசனை நடத்தினார். டெங்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் அக்ேடாபர் மாதம் வரை 6 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்துள்ளனர். ஆனாலும், காய்ச்சல் மற்றும் வேறு வகையான கொசுக்களால் ஏற்படும் தொல்லைகளை களைவதற்கு இதர துறைகளான வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை, கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தூய்மையற்ற இடங்கள், நீர் தேக்கங்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் அகற்றி கொசு புழு உற்பத்தியாகமால் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 மருத்துவமனைகள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கொசு உற்பத்தியாகாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பள்ளிகளில் ஆர்வம் உள்ள மாணவர்களில் இதுவரை 1600 மாணவர்கள் தூய்மை தூதுவர்களாக நியமித்து கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேவைப்பட்டுள்ள இடங்களில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்களில் பொது மக்களுக்கு நிலவேம்பு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் தாங்களாகவே மருந்து மாத்திரை வாங்கி உட்கொள்ளாமல், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை மற்றும் சிசிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பொற்கொடி, மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.