புதுக்கோட்டை: கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டையில் தொடர் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நேற்று இரவு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதை தொடர்ந்து, கடந்த இரண்டு தினங்களாக புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் இடி மின்னல் தாக்கியதில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை பெய்யும் போதும், மின்னல் தாக்கும் போதும் பொதுமக்கள் திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
தொலைபேசிகளை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வர வேண்டும். முன்னதாக கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாகவும், பருவ மழை நாளை முதல் தொடங்கும் என்ற எச்சரிக்கையின் காரணமாகவும் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.