×

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் பிடிபட்டனர்: சென்னைகிரைம்

சென்னை: வானகரம் பகுதியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் 3 விலை உயர்ந்த செல்போன்களை திருடிய, மதுரவாயலை சேர்ந்த 17 வயதுடைய மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
* அண்ணாநகர் கலெக்டர் நகரை சேர்ந்த விக்னேஷ் (22), நேற்று முன்தினம் பாத்ரூம் கழுவும் அமிலத்தை குடித்து மயங்கினார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் கஞ்சா விற்ற, அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* ஆதம்பாக்கத்தில் தங்கி பணிபுரியும் யார்சினா கேஷிங் (22) என்ற மணிப்பூர் வாலிபரை சரமாரியாக தாக்கிய, அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (21), சதீஷ்குமார் (28), மணிமாறன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தார்.
* கொருக்குப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (29) என்பவரின் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
* ஷெனாய் நகர் கஜபதி தெருவை சேர்ந்த பாபு என்பவரின் மகன் முருகானந்தம் (17), தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற முருகானந்தம் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் போலீசார், மாணவனை தேடி வருகின்றனர்.
* அஸ்தினாபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் (45), நேற்று அதிகாலை தனது மனைவி சரஸ்வதி (32), மகன் விஷ்ணு (10) ஆகியோருடன் மினி வேனில் கோயம்பேடு புறப்பட்டார். வடபழனி சிக்னல் அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சி குப்பை லாரி மீது மினி வேன் மோதியதில் சுப்புராஜ், அவரது மனைவி சரஸ்வதி, மகன் விஷ்ணு ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  
* தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் இரவு மது போதையில் தூங்கியவர் மீது மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர், யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.  
* புதுப்பேட்டை வேலாயுதம் தெருவை சேர்ந்த அர்ஜூன் (23), அதே பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவரை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அர்ஜூன் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* அண்ணாநகர் கே.பிளாக்கை சேர்ந்த துரைமுருகன் (49) என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்மநபர்கள், விலை மதிப்புள்ள 2 செல்போன்கள் ₹1,400 ரொக்கத்தை திருடி சென்றனர்.
* தரமணி, டைடல் பார்க் சிக்னல் அருகே பைக் மோதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க பாதசாரி இறந்தார். இவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* கடலூர், ராமாபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஞானகுரு (45), நேற்று மதுரவாயில் - தாம்பரம் பைபாஸ் சாலையில் விபத்தில் சிக்கி இறந்தார்.
* துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த ராமராஜன் (35) என்பவருடன் நேற்று தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் குத்திய, அதே பகுதியை சேர்ந்தவர் விக்டர் (37) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
* புளியந்தோப்பு பாலு தெருவை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (50). இவரது மனைவி மஞ்சுளா (43). நேற்று முன்தினம் இரவு குடும்ப தகராறில் மகேந்திரகுமார் வீட்டில் சூடாக இருந்த பாலை மஞ்சுளா மீது ஊற்றியுள்ளார். புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து மகேந்திரகுமாரை கைது செய்தனர்.

Tags : boys ,cell phone theft , Cell phone theft, T3 boys, cennecrime
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு