×

காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா? கடவுள் தான் காப்பாத்தணும்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ‘சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்தால், கடவுள்தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்,’ என காங்கிரஸ் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜ.வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், சுதந்திர போராட்ட தியாகியான இந்துத்துவாவாதி வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என பள்ளித் தேர்வில் கேள்வி கேட்கும் நாட்டில் எதுவும் நடக்கலாம். மகாத்மா காந்தி கொலை குறித்து சாவர்க்கரிடம் கிரிமினல் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவர் விடுவிக்கப்பட்டார்.  காந்தி கொலை தொடர்பான கபூர் விசாரணை கமிஷன் அறிக்கையில், சாவர்க்கர் மற்றும் அவரது குழுவினரால் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான உண்மைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

எனவே, காந்தியின் 150ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடும் இவ்வேளையில், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது போன்ற பரிந்துரைகளை இந்த அரசு ஏற்றுக் கொள்வதாக இருந்தால், வேறென்ன சொல்வது, கடவுள்தான்  இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காந்தியை புகழ்ந்தது குறித்து திவாரியிடம் கேட்ட போது, ‘‘ஒருபுறம் புகழ்ந்து பேசிவிட்டு, மறுபுறம் இதுபோன்ற பரிந்துரைகளை விடுப்பதுதான் அவர்களின் யுக்தி,’’ என்றார். ‘ஆங்கிலேயர்களால் 50  ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவரான சாவர்க்கர், இந்து மகாசபையை நிறுவி தீண்டாமைக்கு எதிராக போராடியவர். அவர் ஆர்எஸ்எஸ்.சை சேர்ந்தவர் அல்ல,’ என பாஜ தலைவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.



Tags : God ,Congress ,Savarkar ,Gandhi ,murder , Gandhi ,accused o, murder, furious
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?