சென்னை: சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், கடந்த ஜுன் 23ம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக, கடந்த 5ம் தேதி தமிழக அரசு, தற்போதைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியது.இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் என்று வாதிட்டார்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது.மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.