×

மாணவனுக்கு பிரம்படி பள்ளி முதல்வர் கைது : இனி டீச்சர்கள் தான் எச்சரிக்கையாக இருக்கணும்

சென்னை: சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு, அண்ணாநகர், சிடிஎச் சாலையை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி சரளா. இவர்களது மகன் மனோ (15). இவன், இதே பகுதி ராஜிவ்காந்தி நகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை மனோ பள்ளிக்கு சென்றுள்ளான். மதியம் பள்ளி முதல்வர் சரவணன் (32), மாணவன் மனோவை அழைத்துள்ளார். அதன்பிறகு அவனிடம் பள்ளிக்கு ஏன் சரியாக வருவதில்லை. தலைமுடியை வெட்ட மாட்டாயா எனக் கூறி பிரம்பால் சரமாரி அடித்துள்ளார். இதில் மனோவின் தோள்பட்டை, தொடை பகுதியில் தழும்பு ஏற்பட்டது. மாலை வீடு திரும்பிய மனோ, தனது தாய் சரளாவிடம் நடந்ததை கூறி அழுதான்.
இதையடுத்து, அப்பகுதி மக்களுடன் தாய் சரளா, பள்ளியை முற்றுகையிட்டார். பின்னர் அவர்கள் பள்ளி முதல்வர் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

தகவலறிந்து, ஆவடி போலீசார் விரைந்து வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்து கலைந்து போக செய்தனர். பின்னர் பள்ளி முதல்வர் சரவணனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே மாணவன் மனோவை ஆவடி அரசு மருத்துவமனையில் சரளா சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து, மகன் மனோவுடன் வந்து ஆவடி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி முதல்வர் சரவணனை கைது செய்தனர். இதை பார்த்த ஆசிரியர்கள் இனி மாணவர்களை விட ஆசிரியர்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வேதனையுடன் கூறினர்.

Tags : School Principal , School Principal Arrested , Student, Teachers Only Be Alert
× RELATED குப்புரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி