சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிதிவண்டி பயன்பாடு அதிக அளவில் இருக்கும். ஆனால், நம் நாட்டில் மிதிவண்டி பழக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. சென்னையில் 37 சதவீதம் குடும்பங்கள் மிதிவண்டியை பயன்படுத்துகின்றனர். அதேநேரத்தில் கடந்த 2001ம் ஆண்டில் 46 சதவீதம் குடும்பங்கள் மிதிவண்டியை பயன்படுத்தியுள்ளன. மிதிவண்டி ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி ஆகும். மிதிவண்டி ஓட்டுவதை வழக்கமாக்கி கொள்வதன் மூலம் தொற்றாநோய்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி எரிபொருள் செலவை மிச்சப்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் உள்ளிட்ட ஏராளமான பயன்கள் கிடைக்கும். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டிகளை பயன்படுத்தத் தொடங்கினால் ஆண்டுக்கு 2,700 கோடி எரிபொருள் செலவு மிச்சமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்களின்படி, மிதிவண்டி புரட்சி மூலம் 10 ஆண்டுக்கு 85,670 கோடியை மிச்சப்படுத்த முடியும். எனவே மிதிவண்டி பயன்பாட்டை இளைஞர்கள் அதிகரிக்க வேண்டும்.