×

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரன் 1 மாதம் பரோல் கேட்டு மனு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த பரோல் மனு மீது பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்திற்குள் பரிசீலனை செய்து முடிவை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத பரோல் கேட்டு விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவருக்கு இதுவரை 4 முறை மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டு வெளியே வந்துள்ளார்.

7 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 14 ஆண்டுகள் என சிறை தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்படும் நிலையில், அரசியல் பிரச்சனை காரணமாக தனது மகன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படவில்லை. மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என 2018-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அமைச்சரவை விடுதலை வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான பரிந்துரையை ஆளுநரிடம் அனுப்பி வைத்தது. அந்த பரிந்துரை நீண்ட காலமாக ஆளுநரின் கையெழுத்திற்காக காத்திருப்பில் உள்ளது. இந்த நிலையில், ரவிச்சந்திரன் நீண்ட நாள் பரோல் கேட்டு 2018 டிசம்பரில் மனு அளித்த போது, நீண்ட நாள் பரோல் வழங்குவது சாத்தியம் இல்லை.

எனவே புதிதாக பரோல் மனு தாக்கல் செய்தால் 1 மாத காலம் பரோல் வழங்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 27ம் தேதி ரவிச்சந்திரனுக்கு ஒருமாதம் சாதாரண விடுப்பு வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை 3 வாரத்தில் பரிசீலனை செய்து முடிவெடுக்க உள்துறையின் சிறைத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Ravichandran ,jail ,Rajiv , Rajiv assassination case, Ravichandran, parole, Tamil Nadu government, Icort branch, High Court Madurai branch
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!