வாஷிங்டன்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் மேற்கொண்டுள்ள ‘2020 வாக்கெடுப்பு’ பிரசாரம் போலியானது என அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஸ்வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார். சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என அம்மதத்தின் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த சிலர் 1970ம் ஆண்டுகளில் இருந்தே கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு சீக்கியர்கள் இடையே கூட போதுமான ஆதரவு இல்லை. இருந்தாலும் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சிலர் இந்த கோரிக்கைக்கு இன்னும் உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களிடம் ஆதரவும் கோரும் வகையில் ‘2020 வாக்கெடுப்பு’ என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார். அவரிடம் ‘2020 வாக்கெடுப்பு’ குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: இந்த வாக்கெடுப்பு குறித்து பிரசாரம் மேற்கொள்பவர்கள் ஒரு சிலர்தான். இந்த வாக்கெடுப்பு போலியான விஷயம். இதெல்லாம் கடந்த கால விஷயம். நம்பிக்கையிழந்த சிலர் தீவிரவாத செயலில் இறங்குகின்றனர் என்றார்.