×

போலி ஆவணம் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த இருவருக்கு 2 ஆண்டு சிறை: திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் புனிதவதி(35). வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுகா மேல்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(32). இருவரும், செய்யாறு தாலுகா மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக கடந்த 26.9.2013 முதல் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2017 ஏப்ரல் மாதம் மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்போதய திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆய்வு நடத்தினார். மேலும், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு, பணி நியமன ஆணை, கல்வித் தகுதி உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டார்.

அப்போது, ஆங்கில ஆசிரியர் விஜயகுமார், சமூக அறிவியல் ஆசிரியர் புனிதவதி ஆகியோர், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கொடுத்திருந்த சான்று போலியானது என்பதை கண்டுபிடித்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில், 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக இருவரும் போலி ஆவணம் தயாரித்து ெகாடுத்தது உறுதியானது. எனவே, இருவரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் 1 கோர்ட்டில் நடந்து வந்தது.  வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விக்னேஷ்பிரபு, போலி ஆவணம் தயாரித்து கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியர்களாக சேர்ந்த புனிதவதி மற்றும் விஜயகுமாருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

Tags : Thiruvannamalai ,Author , duplicate, document,author, Thiruvannamalai , 2 years
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...