சென்னை: தண்ணீர் திருட்டு காரணமாக கண்டலேறு அணையில் இருந்து 1435 கன அடியாக தண்ணீர் திறந்தாலும் 424 கன அடிதான் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளிடம் புகார் ெதரிவித்துள்ளனர். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு தர வேண்டும். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணை காலத்தில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் தண்ணீர் திறக்க ஆந்திர அரசுக்கு கோரிக்ைக வைத்தது. இதையேற்று, கடந்த 25ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 28ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. ஆரம்பத்தில் 500 கன அடி திறந்து விடப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரித்தது.
இந்த தண்ணீரை ஆந்திர எல்ைலயோர கால்வாய் பகுதிகளில் விவசாயிகள் மோட்டார் மூலம் உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவு குறைவாக உள்ளது. இந்நிலையில், கண்டலேறு அணையில் 1,435 கனஅடி வீதம் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தாலும்கூட தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 424 கனஅடி தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் ஜார்ஜ் ஆகியோர் ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளரிடம் புகார் அளித்துள்ளனர். அதில், கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூடுதலாக தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா தரப்பில் 3 டிஎம்சி வரை தரப்படும் என்று உறுதி அளித்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.