×

தூத்துக்குடி தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்: தமிழிசைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என்று பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற  அவருக்கு அனுமதி அளித்துள்ளது. நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை விட 3.47  லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதில், கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இந்த ஆட்சேபங்கள் தெரிவித்த போது, அதை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தார்.

 மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசிதழில் வெளியிடுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு வாபஸ் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை வாபஸ் பெற  தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதியளித்தார். மேலும், வழக்கு வாபஸ் குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் தமிழிசைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், தூத்துக்குடி தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், எந்த ஆதாரமும் இல்லாமல்  தேர்தல் வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ரிச்சர்டு வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பதில் தருமாறு சந்தானகுமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை  அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Tags : constituency ,Tuticorin ,Withdrawal ,Tamils , Withdrawal, Tuticorin , Advertisements, Tamils
× RELATED தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து...