சென்னை: தேசிய அஞ்சலக வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இடையிலான சிறப்பு வினாடி வினா போட்டி அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. தேசிய அஞ்சலக வாரம் ஆண்டுதோறும் அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள சிறப்பு தபால்தலை மையம் சார்பில், சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இடையிலான சிறப்பு வினாடி வினா போட்டி நேற்று நடைபெற்றது.
சென்னை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இந்த வினாடி வினா போட்டியில் மாணவர் ஆஷிஷ்குமார் முதல் பரிசு பெற்றார். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அஞ்சலக அதிகாரி கனகராஜன் பரிசு வழங்கினார். மேலும், இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த தபால்தலை சேகரிப்பாளர்கள் சங்கத்தின் தென்னிந்திய செயலாளர் மகேஷ் பாரீக் மற்றும் தபால்தலை சேகரிப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு தபால் தலைகளை இலவசமாக வழங்கினர்.