×

மனை பட்டா வழங்க கோரி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 200வது வார்டுக்குட்பட்ட செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவஹர் நகர் ஆகிய பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த 56 குடும்பங்களுக்கு மட்டும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு பட்டா வழங்க கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், தாம்பரம் கோட்டாட்சியர், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை இப்பகுதி மக்கள் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, நீர்நிலை இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன், வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதிக்கு சென்று பட்டா வழங்குவது குறித்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

ஆனால், கணக்கெடுக்கும் பணியை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே, கணக்கெடுப்பு பணியை முழுமையாக முடித்து, அனைவருக்கும் பட்டா வழங்கும்படி இப்பகுதி மக்கள் வருவாய் துறையிடம மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று சோழிங்கநல்லூர் தாசில்தாரிடம் மனு கொடுக்க நண்பகல் வந்த, இரவு 8 மணி வரை காத்திருந்தனர். ஆனால், தாசில்தார் இரவு 8 மணி வரை வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாசில்தாரின் உதவியாளர் விக்னேஷ்  மனுவை பெற்றுக்கொண்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

Tags : Civil Siege of Dasildar ,office ,Civil Siege , Civil Siege , Dasildar's office, demanding land grants
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...