×

6 நாள் தேடுதல் வேட்டைக்கு பின் பந்திப்பூரில் ஆட்கொல்லி புலி பிடிபட்டது

ஊட்டி: பந்திப்பூர் பகுதியில் புலி தாக்கி இருவர் இறந்த நிலையில், 6 நாள் தேடுதல் வேட்டைக்கு பின் ஆட்கொல்லி புலியை கர்நாடகா வனத்துறை உயிருடன் பிடித்தது. நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், சவுடனஹள்ளி மற்றும் ஹண்டிபுரா பகுதியில் கடந்த 7ம் ேததி காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிவலிங்கப்பா(55) என்பவரை புலி தாக்கி கொன்றது. கடந்த ஒரு வாரத்தில் இந்தப் புலி 3 மாடுகளையும், கடந்த செப்டம்பர் மாதம் இதே பகுதியைச் சேர்ந்த சிவமாதய்யா என்பவரையும் தாக்கி கொன்றுள்ளது. ஆட்கொல்லி புலியை பிடிக்க கோரி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுடனஹள்ளி மற்றும் ஹண்டிபுரா கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் கோபத்தில் இருப்பதால் வனத்துறையினருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அடுத்த தாக்குதல் ஏற்பட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த கர்நாடக வனத்துறை இந்த புலியை ஆட்கொல்லி என அறிவித்து 48 மணி நேரதுக்குள் உயிருடனோ அல்லது சுட்டு பிடிக்க களத்தில் இறங்கியது. ஆனால் சுட்டு கொல்ல எதிர்ப்பு கிளம்பிய நிலையில் உயிருடன் பிடிக்க திட்டமிடப்பட்டது.

தொடர்ந்து வனப்பகுதியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலியை பிடிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. பந்திப்பூர் புலிகள் காப்பக கள இயக்குநர் பாலச்சந்திரா தலைமையில் 6 கும்கி யானைகள், 6 மருத்துவ குழுக்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மதியம் சவுடனஹள்ளி, வுண்டிபுரா இடையில் உள்ள வனத்தில் அடர்ந்த புதரில் இந்த புலி இருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக மருத்துவ குழு வரவழைத்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் புலி மயக்கமடைந்து. உடனே பொிய அளவிலான வலை கொண்டு வரப்பட்டு மயங்கிய புலியின் உடல் மீது வலையை போர்த்தி தூக்கிவந்து வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர். மனிதர்களையும், கால்நடைகளையும் கொன்று வந்த ஆட்கொல்லி புலி, 6 நாள் தேடுதல் வேட்டைக்கு பின் உயிருடன் பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
இது குறித்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், இந்த புலிக்கு 6 முதல் 7 வயது இருக்க்கும். உடலில் எந்த காயங்களும் இல்லை. இந்த புலி கபினியில் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. சிவலிங்கப்பாவை தாக்கிய இடத்தில் இருந்த கால்தடமும் இந்த புலியின் கால்தடமும் ஒத்துப்போயின. இதன் அடிப்படையில் பின் தொடர்ந்து உறுதி செய்து பிடித்தோம். எப்படி ஆட்கொல்லியாக மாறியது என ஆய்வு செய்யப்படும். புலியை காட்டில் விடுவதா அல்லது சரணாலயத்தில் பராமரிப்பதா என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bandipur ,search , Hunting, Bandipore, Rocket Tiger
× RELATED கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டி...