×

காதல் திருமணம் செய்த 3 நாளில் மகளை எரித்து கொலை செய்த பெற்றோர்: போலீசில் கணவர் பகீர் புகார்

சித்தூர்: காதல் திருமணம் செய்த 3நாளில் புதுப்பெண் தனது தாய்வீட்டுக்கு சென்றபோது மர்மமான முறையில் இறந்தார். அவரை அவரது பெற்றோரே கொலை செய்து சடலத்தை எரித்துள்ளனர் என்று பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சித்தூர் மாவட்டம், ஓட்டிமடி கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்(22). ரெட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனா(20). வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு சந்தனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த எதிர்ப்பை மீறி கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாக திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்து இருவரும் நந்தகுமாரின் வீட்டிற்கு சென்றனர். நேற்று முன்தினம் சந்தனா, தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் நந்தகுமாருக்கு போன் செய்து இரவு தங்கிவிட்டு காலையில் வருகிறேன் என்றாராம்.

நேற்று காலை சந்தனா தனது தாய்வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நந்தகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் தனது உறவினர்களுடன் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் சந்தனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடலை அங்குள்ள விவசாய நிலத்தில் எரித்து தகனம் செய்து விட்டார்களாம். இதனால் சந்தேகம் அடைந்த நந்தகுமார் சாந்திபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது மனைவியை அவரது பெற்றோரே கொலை செய்து சடலத்தை எரித்திருப்பதாக சந்தேகம் உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கிருந்த எலும்புக்கூடுகளை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த புதுப்பெண் 3 நாளில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Parents ,marriage Parents , Love marriage, burnout, parenting, complaining
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்