×

நாடு முழுவதும் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் 127 பேர் கைது: தமிழகத்தில் 33 பேர், கேரளாவில் 17: என்ஐஏ ஐ.ஜி.அலோக் மிட்டல் தகவல்

டெல்லி: ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்திய  பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது. இதன்படி, கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு பலரைக் கைது செய்தனர். பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் கொச்சியில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு, தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் சென்னை வந்த தமிழகத்தில் 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மண்ணடியில் இயங்கி வரும் வஹாபி  இஸ்லாம் மற்றும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா ஆகிய அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையிட்டனர். இலங்கை தற்கொலைத் தீவிரவாதியான ஜஹ்ரான் ஹசீம், தாக்குதலுக்கு சில நாட்கள் முன்பு  மண்ணடி வந்ததாக கூறப்படுவதால், இங்கு தங்கினானா? என்றும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டிளித்த என்ஐஏ ஐ.ஜி.அலோக் மிட்டல், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 127 பேர் கைது  செய்யப்பட்டதில் 33 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும் தெலுங்கானாவில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் கேரளாவில் கைது  செய்யப்பட்டவர்களுக்கு இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.



Tags : raids ,NIAs ,Tamil Nadu ,Kerala ,NIA IG Alok Mittal NIAs ,NIA IG Alok Mittal , NIAs nationwide 127 arrested in raids: 33 in Tamil Nadu, 17 in Kerala: NIA IG Alok Mittal
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...