×

காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருவதாக அம்மாநில ஆளுநரின் ஆலோசகர் ஃபரூக் கான் பேட்டி

ஜம்மு: காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருவதாக அம்மாநில ஆளுநரின் ஆலோசகர் ஃபரூக் கான் பேட்டியளித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதலாகவே மாநிலத்தில் பயங்கர தாக்குதலை நடத்தவும், குழப்பமான சூழலை உருவாக்கவும் பாகிஸ்தான் முயன்று வருகிறது. இதற்காக காஷ்மீரில் உள்ள இளைஞர்களை தீவிரவாதத்தின் பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.

ஆனால் தேசப்பற்று மிக்க காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்க பாகிஸ்தானால் முடியவில்லை. இதனால் அந்நாடும் அந்நாட்டில் உள்ள தீவிரவாதிகளும் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் நலனைக் கருத்தில்கொண்டே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர். எனவே காஷ்மீர் மக்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடலாம் என்கிற பாகிஸ்தானின் எண்ணம் இனி ஈடேறாத கனவாக மாறிவிட்டது.

இதனை புரிந்துகொண்ட பாகிஸ்தான் தங்கள் நாட்டு தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் நமது எல்லை அருகே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நமது தீரமிக்க ராணுவ வீரர்களை தாண்டி காஷ்மீரில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை கூட அவர்களால் கொண்டு செல்ல முடியாது என்று ஃபரூக் கான் கூறியுள்ளார்.

Tags : Pakistan Farooq Khan ,Governor ,Pakistan ,Adviser , Kashmir Peace, Disruption, Pakistan, Efforts, Governor's Counsel, Farooq Khan, Interview
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...