சத்தியமங்கலம்: குட்டி யானையை யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதி பவளக்குட்டை வனப்பகுதியில் இருந்து கடந்த இருவாரங்களுக்கு முன்பு வெளியேறிய 3 மாதமே ஆன பெண் யானைக்குட்டியை வனத்துறையினர் அடர்ந்த வனத்திற்குள் கொண்டு சென்று விட்டனர்.
ஆனால் இந்த குட்டியானை மற்ற யானைக்கூட்டங்களுடன் சேராமல் தன்னந்தனியாக வனச்சாலையில் சுற்றிக்கொண்டிருந்ததால், ஆசனூர் வனத்துறையினர் குட்டியானையை மீட்டு பவானிசாகர் அருகே உள் காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து குட்டி யானைக்கு தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் பால் உணவாக அளிக்கப்பட்டு வந்தது. இந்த குட்டியானை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று விடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 9ம் தேதி அதிகாலை யானைக்குட்டியை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று அப்பகுதியில் குட்டிகளுடன் உலவும் யானைக்கூட்டத்துடன் சேர்க்க முயற்சித்து வருகின்றனர்.
5 நாட்கள் ஆகியும் குட்டியானையை மற்ற யானைக்கூட்டத்தில் சேர்க்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் யானைக்குட்டியை மற்ற யானைக்கூட்டங்களுடன் சேர்க்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இந்த யானைக்குட்டியை யானைக்கூட்டங்கள் சேர்க்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயரதிகாரிகள் முடிவெடுப்பர் என தெரிவித்தனர்.