×

அறந்தாங்கி அருகே கணவன் விபத்தில் பலி: நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே கணவன் விபத்தில் பலியான சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி தேவிபாலா. இவர்களுக்கு யுகேஷ், யுதர்சனா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். டீ மாஸ்டரான அசோகன் சில மாதங்களுக்குமுன் வெட்டிவயல் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கணவர் அசோகன் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த தேவிபாலா குடும்பத்தினர், அவரது மரணத்திற்கு பிறகு குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கணவன் சாவுக்கு காரணமான வாகன உரிமையாளர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.  இந்நிலையில் நேற்று மாலை தேவிபாலா தனது குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததுடன், தானும் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர்கள் மூவரையும் உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Aranthangi ,accident ,children ,suicide , Aranthangi
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...