×

ராஜிவ் கொலையை நியாயப்படுத்தும் சீமான் மீது வழக்குப்பதிய கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: ராஜிவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தும் சீமான் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தியும், அதை செய்தவர்களை வரலாறு பாராட்டும் என்று பயங்கரவாதத்தை பகிரங்கமாக ஆதரித்து பேசியிருக்கிறார். இதன் மூலம் தடை செய்யபட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரித்த தேசத்துரோக குற்றத்தை சீமான் செய்திருக்கிறார். அவரது அநாகரீக ஆணவ பேச்சை காங்கிரஸ் கண்டிக்கிறது.  இந்திய அமைதி படை வீரர்கள் 2000 பேரை இலங்கை மண்ணில் கோழைத்தனமாக கொன்று குவித்தவர்கள் நன்றிகெட்ட விடுதலை புலிகள்.

 பிரபாகரனின் சதி திட்டத்தால் பலியாக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் உயிர்தியாகத்தை பகிரங்கமாக கொச்சைபடுத்தும் சீமானை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ராஜிவ் படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டி, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய சீமான் மீது தேசத்துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இத்தகைய தேசவிரோத செயலில் ஈடுபட்ட சீமானை தலைவராக கொண்ட நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை  தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்கான புகாரகளை காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : seaman ,KS Alagiri ,murder ,Rajiv , KS Alagiri to sue seaman to justify Rajiv's murder
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...