திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே காஸ் ஏற்றி வந்த லாரி மற்றும் லோடு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியாகினர். விழுப்புரம் மாவட்டம் லாலாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் சந்திரன் (20) என்பவர், தான் புதிதாக வாங்கிய லோடு வேனை பூஜை செய்ய ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல இருந்தார். அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (17), பொன் மனச்செல்வன் (13) உள்ளிட்ட 13 பேரை ஏற்றி கொண்டு லாலாபேட்டையில் இருந்து லோடு வேனில் கிளம்பி சென்றார். வேனை சந்திரன் ஓட்டினார். மகாலட்சுமி, தமிழரசன் உள்ளிட்ட 13 பேரும் அருகருகே கிராமங்களில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
கடம்பூர் காட்டுகொட்டாய் அருகே சென்றபோது, காஸ் காலி சிலிண்டர்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. வளைவு பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக லாரி, லோடு வேன் மீது மோதியது. இதில், மகாலட்சுமி, தமிழரசன், பொன்மனச்செல்வன் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை கைப்பற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த மற்ற 11 பேரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.