கோவில்பட்டி: தூத்துக்குடி அருகே வறட்சியால் உளுந்து, பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், விஷம் குடித்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கல்லூரணியை சேர்ந்தவர் முனியசாமி (70). விவசாயியான இவர், தனது 10 ஏக்கர் நிலத்தில் உளுந்து, பருத்தி பயிர்களை சாகுபடி செய்திருந்தார். ஆனால், வறட்சி காரணமாக போதுமான விளைச்சல் இல்லை. இதனால் விரக்தியடைந்த முனியசாமி விஷம் குடித்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.