சென்னை: வணிகவரித்துறையில் வரிவருவாய் இலக்கை எட்ட முடியாத நிலையில் ரூ.5ஆயிரம் கோடி இழப்பு தொகை அந்த துறை மத்திய அரசிடம் இருந்து பெற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்குகள் சேவை வரி கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதுவரை சரக்குகளுக்கு மட்டுமே வரி வசூலித்து வந்த தமிழக அரசு சேவை வரிக்கும் சேர்த்து வசூலித்து வருகிறது. இதில், ஒவ்வொரு வரிக்கும் மத்திய, மாநில அரசுகள் வருவாயை பிரித்து கொள்கிறது. இந்த ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர்.
ஆனால், ஆல்கஹால் மற்றும் எரிபொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் தற்போது வரை தமிழக அரசை ஒரளவு காப்பாற்றி வருகிறது. இருப்பினும் இந்தாண்டு வரி வருவாய் இலக்கை அடைய முடியாமல் அதற்காக இழப்பு தொகையாக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்று வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை 46,283 வரிவருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஆல்கஹால், எரிபொருட்கள் மூலம் ரூ.20863 கோடி வரிவருவாய் உட்பட 47,923 வருவாய் எட்டியிருப்பதாக வணிகவரித்துறை கூறியுள்ளது. ஆனால், வணிகவரித்துறை ரூ.5165 கோடி இழப்பு தொகை பெற்று இந்த வரிவருவாய் இலக்கை எட்டியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மே மாதத்தில் ரூ.1,673 கோடியும், ஜூலையில் ரூ.1960 கோடியும், ஆகஸ்ட்டில் ரூ.1565 கோடியும், செப்டம்பரில் ரூ.380 கோடியும் இழப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ஐஜிஎஸ்டி மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத நிலையில், ரூ.
1005 கோடி தமிழக அரசு செட்டில்மென்டாக பெற்றுள்ளது. இதன் மூலம், ரூ.5 ஆயிரம் கோடி கூடுதலாக பெற்று தான் வருவாய் இலக்கை எட்டியுள்ளது. இல்லையெனில் ரூ.5 ஆயிரம் கோடி வரை வரிவருவாய் குறைந்து இருக்கும். அதே நேரத்தில் கடந்தாண்டு ரூ.2357 கோடி மட்டுமே இழப்பு தொகை பெறப்பட்டுள்ளது. அதனால், தான் ரூ.41,175 கோடி வருவாய் ஈட்ட முடிந்தது என்று வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.