×

கணவனுடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலையத்தில் பெண் தர்ணா

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அடுத்த எழில் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணி (30). இவரது மனைவி ரேவதி (28). இவர்கள், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு தியா (5)  என்ற குழந்தை உள்ளது. ரேவதியை பார்க்க அவரது தோழி மோனிஷா என்பவர், அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, மணிக்கும், மோனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இது ரேவதிக்கு பிடிக்காததால், மோனிஷாவை  இனிமேல் எனது வீட்டிற்கு வரகூடாது என கண்டித்துள்ளார். இந்நிலையில், கணவர் மணி கடந்த ஒரு வருடமாக சரிவர வீட்டிற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி விசாரித்தபோது, மணி, மோனிஷாவுடன் தனியாக குடும்பம் நடத்துவது தெரிந்துள்ளது. இதுபற்றி, கணவரிடம் கேட்டபோது,  “எனக்கும், மோனிஷாவுக்கும் திருமணம்  நடந்துவிட்டது. நீ, வீட்டை விட்டு வெளியேறு. நாங்கள் இருவரும் அங்கு வந்து  வசிக்கப் போகிறோம்” என கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ரேவதி இதுகுறித்து கிண்டி மகளிர் காவல் நிலையம் மற்றும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று தமிழ்நாடு ஏழை எளியோர்  நடுத்தர மக்கள் நல சங்க தலைவர் லிங்கபெருமாள் தலைமையில் ரேவதி மற்றும் அவரது குடும்பத்தினர், கண்ணகி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார் நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன், எனக்கூறி காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அங்கிருந்து  அனைவரும் கலைந்து சென்றனர்.



Tags : Woman Darna ,police station ,Darna , Demanding, placed , husband, Girl Darna , police station
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து