×

காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் கிரீடம் 370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவிக்க முடியுமா?: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்

ஜால்கோன்: “ஜம்மு காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சிகளால் அறிக்கை விட முடியுமா?” என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஜால்கோன் மாவட்டத்தில் நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில்  முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:நான் மகாராஷ்டிரா வந்திருப்பது, தேவேந்திர பட்னவிசை 2வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுப்பதற்காக மக்களின் ஆதரவை கேட்பதற்கு தான் வந்துள்ளேன். எதிர்க்கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்த மத்திய அரசின்  முடிவை குறித்து விமர்சித்து வருகின்றன.ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் எங்களுக்கு சாதாரண நிலத்தொகுப்பு அல்ல. அவை இந்தியாவின் கிரீடம்.  40 ஆண்டுகளாக நீடித்த நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு 4 மாதங்களுக்கு மேல் ஆகாது. அண்டை நாட்டை  போலவே எதிர்கட்சிகளும் கூறி வருகின்றன.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது துரதிஷ்டவசமானது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஒட்டு மொத்த நாட்டின் உணர்வுகளுக்கு நேர்மாறாக எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்து  இருக்கிறது. நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு துணிவு இருந்தால், மாநில தேர்தல் மற்றும் எதிர்காலத்தில் தேர்தல்  அறிக்கையில், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370, 35ஏ மீண்டும் கொண்டு வரப்படும் என்று அறிவிக்க முடியுமா?  பாஜ, மோடி அரசால் நீக்கப்பட்ட, ஆகஸ்ட் 5 முடிவை மாற்ற முடியுமா? முதலை கண்ணீர் வடிப்பதை நிறுத்துங்கள். 370வது சட்டப்பிரிவை கொண்டு வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்குமா, இதற்கு முன் இதுபோன்ற முடிவு  சிந்திக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளாக பிரிவினைவாதமும், தீவிரவாதமும் தான் பரவி இருந்தது. இந்த நிலை மாறுகிறது.

முத்தலாக் தடை சட்டத்தையும் எதிர்கட்சிகள் எதிர்த்தன. இஸ்லாமிய சகோதரிகளுக்கு நீதி கிடைக்காததை அவர்கள் பார்க்க முயற்சித்தனர்.  ஆனால், இஸ்லாமிய தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் கொடுத்த வாக்கை நான் காப்பாற்றினேன்.  முத்தலாக்  நடைமுறையை மீண்டும் உங்களால் கொண்டு வரமுடியுமா என நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். பாஜ தலைமையிலான அரசு பேசுவதற்கும், செயல்படுத்துவதற்கும் எந்த வேறுபாடும் இருக்காது. உலக சக்திகள் அனைத்தும்  இன்று இந்தியாவின் குரலை கவனித்து வருகின்றன. புதிய இந்தியா, மோடியின் காரணமாக உருவாகவில்லை; உங்களின் ஒரு ஓட்டினால்தான் உருவாகி இருக்கிறது.இவ்வாறு மோடி பேசினார்.

பிரதமருக்குள் இருந்த கவிஞரை வெளிகொணர்ந்த மாமல்லபுரம்
சீன அதிபருடனான சந்திப்புக்காக கடந்த வெள்ளி, சனியன்று பிரதமர் மோடி சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார். நேற்று முன்தினம் காலை அங்குள்ள கடற்கரையில் அவர் நடைபயிற்சி மேற் ெகாண்டார். அப்போது, இயற்கையுடன் ஏற்பட்ட உணர்வுகளை அவர், 8 பத்திகளை கொண்ட கவிதையாக இந்தியில் எழுதியுள்ளார். அதை அவர் நேற்று டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த கவிதையில், சூரியன், அலைகள் உடனான கடலின்  உறவு மற்றும் அதன் வலிகள் குறித்து மோடி எழுதியுள்ளார். அந்த கவிதை வருமாறு:கடற்கரையில் உலா வந்தேன்கடலுடன் உரையாடினேன்அதிலே, நானே தொலைந்து போனேன். எனது உணர்வுகளின் உலகத்தை இந்த உரையாடல்எடுத்து செல்கிறது.

ஜப்பான் புயல் பலி மோடி இரங்கல்
ஜப்பானில் ஹஜிபிஸ் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட சம்பவங்களில் 33  பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது  டிவிட்டரில், ‘ஜப்பானில் ஹஜிபிஸ் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கை பேரிடரால் ஏற்பட்ட சேதம் மற்றும் பேரழிவில் இருந்து விரைவில் மீண்டு  வருவதற்கு பிரார்த்திக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் ஜப்பானுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும். ஜப்பான் சென்றிருக்கும் இந்திய கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும்,’ என்று  பதிவிட்டுள்ளார்.

கையில் வைத்திருந்தது என்ன?
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பின்போது, கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கினார். நேற்று முன்தினம் அதிகாலை அவர், கடற்கரையில் காலணி இன்றி நடைபயிற்சி செய்தார். மேலும், கடற்கரையில்  இருந்த குப்பைகளை சேகரித்து அகற்றினார். அப்போது, மோடி தனது கையில் சிறுதடி போன்ற பொருளை வைத்திருந்தார். அது என்ன? என  மோடியிடம் டிவிட்டர் மூலம் மக்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு நேற்று மோடி  வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘சனிக்கிழமையில் இருந்து பலர், கடற்கரையில் குப்பைகளை நான் அகற்றியபோது எனது கையில் வைத்திருந்தது என்ன என்று கேள்வி எழுப்பி வருகிறீர்கள்.  நான் வைத்திருந்தது அக்கு பிரஷர் ரோலர்.  இதனை  நான் அடிக்கடி பயன்படுத்தி வருகிறேன். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது,’ என்று கூறியுள்ளார். மேலும், அக்குபிரஷர் ரோலர் வைத்திருக்கும் புகைப்படங்களையும் இதில் அவர் இணைத்துள்ளார்.


Tags : re-enactment ,Modi ,Ladd ,Kashmir ,Crown of India ,Parties ,Law Division ,Ladakh , Kashmir , Ladakh ,Law Division, Modi's challenge, parties
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...