×

ஜப்பானில் புயல் தாக்கி 33 பேர் பரிதாப பலி

டோக்கியோ: ஜப்பானில் ‘ஹஜிபிஸ்’ புயல் தாக்கியதில் 33 பேர் பலியாகி உள்ளனர். 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை.ஜப்பான்  தலைநகர் டோக்கியோ, அதன் சுற்று வட்டாரங்களான குன்மா, மியாகி, புகுஷிமா  ஆகியவற்றை ‘ஹஜிபிஸ்’ புயல் நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது.  இது, டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில் கரையை   கடந்தது. இதனால், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து,  சிகுமா, தாமா உள்ளிட்ட 14 ஆறுகளில் அபாய கட்டத்தை கடந்து வெள்ளம் செல்கிறது.  இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் குடியிருப்பு  பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில், 14,000க்கும் மேற்பட்ட  வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின.  

தீயணைப்பு படையினர், ராணுவத்தினர், பேரிடர்  மீட்பு குழுவினர் என  27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர், படகு  மூலம் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹஜிபிஸ்  புயலுக்கு 33 பேர்  உயிர் இழந்திருப்பதாகவும், 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் செய்திகள்  வெளியாகி உள்ளன. இந்த புயலால் நாடு முழுவதும் ஏறக்குறைய 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து   செய்யப்பட்டுள்ளன. 3 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளின் மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டுள்ளது.



Tags : Storm ,Japan Storm Kills ,Japan , Storm, kills, Japan
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...