×

முக்கிய பிரச்னைகளில் இருந்து மோடி குழுவும், மீடியாக்களும் மக்களை திசை திருப்புகின்றன: ராகுல் குற்றச்சாட்டு

லத்தூர்: ‘‘நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி தலைமையிலான குழுவும், மீடியாக்களும் திசை திருப்புகின்றன,’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு லத்தூர் மாவட்டம், ஆசா பகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கலந்து கொண்டு பேசியதாவது: நாட்டில் உள்ள  இளைஞர்கள் வேலை கேட்கும்போது, நிலாவைப் (சந்திரயான்-2) பாருங்கள் என்கிறது அரசு.

நிலாவை பற்றியும், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து பற்றியும் பேசும் அரசு, நாட்டில் உள்ள பிரச்னைகள் பற்றி கவலைப்படாமல் மவுனமாக  இருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங்கை, மோடி சந்தித்தபோது டோக்லாம் ஊடுருவல் குறித்து கேட்டாரா? நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மோடி, அமித்ஷா குழுக்களும், மீடியாக்களும் திசை திருப்புகின்றன.  விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, பணக்காரர்களின் கடன் தள்ளுபடி ஆகியவை பற்றி மீடியாக்கள் மவுனமாக இருக்கின்றன. ஏனென்றால், அந்த மீடியாக்கள் எல்லாம் பணக்காரர்களுக்கு சொந்தமானவை. ஏழைகளின் பாக்கெட்டில்  இருந்து பணத்தை எடுத்து பணக்காரர்களுக்கு கொடுக்கத்தான் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது. இவ்வாறு ராகுல் கூறினார்.



Tags : group ,Modi ,Rahul ,Modi Group , main, issues, Modi Group , Media,Rahul
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...