×

ஜப்பான் ஹகிபிஸ் புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு: 3,76,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

டோக்கியோ: ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானை ஹகிபிஸ் புயல் நேற்று கடுமையாக தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு புயல் கரையை கடந்தது. இதனால், பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்ததால், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்பட 7 பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 42 லட்சம் பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். டோக்கியோவில் ஓட்டல்கள், கடைகள், மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கையாக, ஜப்பான் முழுவதும் சுமார் 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு தேவையான மின் சேவை துண்டிக்கப்பட்டது. இந்த புயல் மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது.

புயல் தாக்குதலுக்கு ஏற்கனவே 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இப்புயல் பாதிப்பு காரணமாக 12 பேரை காணவில்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகளில் 27 ஆயிரம் ராணுவப் படைகளும், மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தித்தொடர்பாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார். மேலும், அவர் தற்போது சுமார் 3 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், 14 ஆயிரம் வீடுகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Tags : storm ,Hughibis ,Japan ,homes , Japan, Hagibis Storm, Electricity, Disconnection
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...