×

தொடரை வென்றது இந்தியா: தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

புனே: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால் சதமடித்து 108 ரன்னிலும், புஜாரா 58 ரன்னிலும், ரகானே 59 ரன்னிலும், ஜடேஜா 91 ரன்னிலும் அவுட்டாகினர். விராட் கோலி இரட்டை சதமடித்து 254 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. 3-வது நாள் ஆட்டத்தில் 162 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 9-வது விக்கெட்டுக்கு பிலாண்டர் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சாளர்களை மிகப்பெரிய அளவில் சோதித்தது. மகாராஜ் அரைசதம் அடித்தார். பிலாண்டர் பந்துகளை தடுத்தாடுவதில் முனைப்பு காட்டினார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 42.1 ஓவர்கள் விளையாடி 109 ரன்கள் குவித்தது. இறுதியில்தென் ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்களும், முகமது ஷமி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. 326 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் முறையாக பாலோ ஆன் வழங்கியது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கிராமும், டீன் எல்கரும் களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் மார்கிராமை அவுட்டாக்கினார் இஷாந்த் சர்மா. அடுத்து வந்த டு புருயின் 8 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து டு பிளசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் நிதானமாக ஆடிய எல்கர் 48 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, 4-ம் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து திணறி வந்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணி தடுமாற்றத்தை தான் கண்டது. இறுதியாக 67.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியில் அதிகப்பற்றமாக எல்கர் 48 ரன்களும், பவுமா 38 ரன்களும் எடுத்தனர். தென்னாபிரிக்க அணியில் பல வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்திய அணியின் சார்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்களும், அஷ்வின் 2 விக்கெட்டும், இஷாந்த், ஷமி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


Tags : Test ,South Africa ,innings ,India , South Africa, Test match, India, win
× RELATED 328 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி: 5 விக்கெட் வீழ்த்திய கசுன் ரஜிதா