ஊட்டி: ஊட்டி மலை ரயிலின் 111வது பிறந்த நாள் வரும் 15ம் தேதி வரும் நிலையில், அன்றைய தினம் ஊட்டி ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. மலைகளின் நடுவே நாள் தோறும் தவழ்ந்து வரும் ஊட்டி மலை ரயில் கடந்த 119 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் என்ற பகுதிக்கு இயக்கப்பட்டது. அதன் பின் கடந்த 1909ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஊட்டியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர், மலை ரயில் ஊட்டி நகருக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ரயில் பாதை ஆசிய கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதையாகும். குன்னூரிலுள்ள பணிமனை தெற்கு ரயில்வேயில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரே நீராவி இன்ஜின் பணிமனையாகும். இந்த பணிமனை கடந்த 1899ம் ஆண்டு துவக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் - குன்னூர் பிரிவில் பயன்படுத்துவதற்காக நீராவி இன்ஜின்கள் சுவிட்சர்லாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே உள்ள ரயில் பாதை ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தானதால், பல் சக்கரத்தின் உதவியுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது. நிலக்கரி விலை உயர்வாலும், 100 ஆண்டுகளுக்கு மேல் மலை பாதையில் பயணிகளை இழுத்துக் கொண்டு ஓடிய களைப்பில் நீராவி இன்ஜின்கள் உள்ளதாலும், டீசல் இன்ஜின் ஊட்டி - குன்னூர் இடையே பயன்படுத்தப்படுகிறது. இதனால், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் 30 நிமிடங்களில் கடந்து சென்று விடுகிறது. 11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும் கொண்ட 4 பெட்டிகளை இந்த ரயில் கொண்டுள்ளது. இந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை (46 கி.மீ.) தூரம் 208 வளைவுகளையும், 250 பாலங்களையும், 16 சுரங்க பாதைகளையும் கடந்து செல்கிறது. நீலகிரி மலை ரயிலை யுெனஸ்கோ பாரம்பரிய ரயிலாக அறிவித்துள்ளது. இந்த மலை ரயிலின் 111வது பிறந்த நாள் விழா நாளை மறுதினம் (15ம் ேததி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஊட்டி ரயில் நிலையத்தில் ‘கேக்’ வெட்டி கொண்டாட பாரம்பரிய மலை ரயில் அறக்கட்டளை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரயிலில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கவும் மலை ரயில் பாரம்பரிய அறக்கட்டளை முடிவு செய்துள்ளதாக இதன் நிர்வாகி நடராஜ் தெரிவித்தார்.