புஜிசவா: கனமழை மற்றும் சூறாவளியுடன், ஜப்பான் தலைநகர் டோக்கியோவை நேற்று தாக்கியது ஹஜிபிஸ் புயல். அதற்கு முன் லேசான நிலநடுக்கமும் ஏற்பட்டது. ‘ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் சுற்றுப்புற பகுதியான குன்மா, சைதமா, கங்கவா, மியாகி மற்றும் புகுஷிமா ஆகியவற்றை ஹஜிபிஸ் என பெயரிடப்பட்ட புயல் நேற்று தாக்கும். அப்போது சூறாவளி காற்றுடன், கனமழை பெய்யும். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக தீவிரமான மழை பெய்யும்,’ என ஜப்பான வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஜப்பானின் ஷிசோகா என்ற பகுதியில் ஹஜிபிஸ் புயல் நேற்று கரையை கடப்பதற்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 புள்ளிகள் பதிவாகியது. ஷிபா கடற்கரை பகுதியில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. கடலின் மிக ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதால், அதிக பாதிப்பு ஏற்படவில்லை.
ஜப்பானின் வடமேற்கு பகுதியை நோக்கி மணிக்கு 144 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், டோக்கியோ நகரை நேற்று மணிக்கு 35 கி.மீ வேகத்தில் கடந்தது. இதனால் ஷிசோகா, மீ மற்றும் தென்மேற்கு டோக்கியோவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ஷிபா பகுதியின் இசிஹாரா நகரில், ஒரு காரை புரட்டி போட்டது சூறாவளி. இதில் அதில் பயணம் செய்தவர் பலியானார். சூறாவளி சேதப்படுத்திய ஒரு வீட்டில் 5 பேர் காயம் அடைந்தனர். டோக்கியோவின் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.