சென்னை,: தி.நகரில் நேற்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர், கடைக்கு வந்த நபரின் பைக்குள் கைவிட்டு, செல்போன், பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் 1வது பிளாக்கை சேர்ந்தவர் செல்வி (40). இவரது கணவன் பல ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். ஒரு மகள், 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்த செல்வி, கடன் தொல்லை காரணமாக நேற்று முன்தினம் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* செம்பியம், ராஜமங்கலம், கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பெரம்பூர் மங்களபுரத்தை சேர்ந்த சுபாஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையை சேர்ந்த முகமது ரபீக் (26) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி நீலம்பாஷா தர்கா தெருவை சேர்ந்த தஸ்தகீர் (24), டெல்லி, மேற்கு நிஜாமுதீன் தெருவை சேர்ந்த முகமது நதீம் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.