சென்னை: சென்னை பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி, எஸ்டிஎன்பி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் எம்ஓபி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி, பி மண்டல அணியை 6-2 என்ற கோல் கணக்கிலும், ஏ மண்டல அணியை 14-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. அதுபோல், எத்திராஜ் கல்லூரி ஏ மண்டல அணியை 7-1 என்ற கோல் கணக்கிலும், பி மண்டல அணியை 5-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.
கடைசியாக நடந்த எம்ஓபி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அதனால் எம்ஓபிவைஷ்ணவா,
எத்திராஜ் என இரு கல்லூரிகளும் சம எண்ணிக்கையில் புள்ளிகள் பெற்றன. அதிக எண்ணிக்கையில் கோல் அடித்த எம்ஓபி வைஷ்ணவா, கோல் வித்தியாச அடிப்படையில் சாம்பியன் பட்டம் வென்றது.