சென்னை: மாவட்ட அளவிலான தரவரிசை கேரம் போட்டிகள், சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் 5 நாட்கள் நடந்தது. பெரம்பூர் வி.எம் கேரம் அகடமி நடத்திய இந்தப் போட்டியில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், கேடட் என 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப் போட்டிகளில், சீனியர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழ்ச்செல்வன், அருண் கார்த்திக் இணை சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுஷ்மிதா சாம்பியன் ஆனார். கேடட் பெண்கள் பிரிவில் செம்மொழி தமிழ் எழில், ஆண்கள் பிரிவில் மிகில் ராஜ், சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் காசிமா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். ஜூனியர் ஆண்கள் பிரிவில் முஷரப், சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில் மிதுன் ஆகியோர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
கேடட் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அப்துல்லா, சீனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காசிமா, சீனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிஷோர் குமார் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு கேரம் விளையாட்டின் முன்னோடியான பங்காரு பாபு, சென்னை கேரம் சங்கத்தலைவர் ரவிக்குமார் டேவிட், துணைத்தலைவர் விஜயராஜ், அமுதவாணன் ஆகியோர் கோப்பைகளையும் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினர்.