சென்னை: திமுக உறுப்பினர் உரிமை சீட்டுக்களை உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு உறுப்பினர் உரிமை சீட்டுக்களை கடந்த செப்டம்பர் 28, 29ம் தேதிகளில் சென்னை நான்கு மாவட்டங்களில் உள்ள பகுதி, வட்ட கழக வாரிய தலைமை கழக நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டது.
அவ்வாறு பெறப்பட்ட உறுப்பினர் உரிமை சீட்டுக்கள் இன்று வரை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று தலைமை கழகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே, வருகிற 15ம் தேதிக்குள் உறுப்பினர் உரிமை சீட்டுக்களை பெற்றவர்கள், உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இதனை தொடர்ந்து, புகார்கள் வருமேயானால், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.